தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி 20 ஆண்கள், 14 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது. அதில், திருவாரூர் - 12, புதுக்கோட்டை - 7, தஞ்சை - 4, நாகை - 4, கடலூர் - 3, திருச்சி - 2, திண்டுக்கல் - 2, சிவகங்கை - 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
குடியிருப்புப் பகுதிகள், வீடுகள், மின்சார வசதி, பயிர்கள், படகுகள், மரங்கள் என நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தற்போது இம்மாவட்டம் முழுவதும் பல பகுதிகள் மற்றும் நடமாடும் நிவாரண முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களும் விரைவாக தூய்மைப்படுத்தப்பட்டு, முழு சுகாதாரத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
நாகை முழுவதும் முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 200 பேர் கொண்ட மருத்துவக் குழு இங்கு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.