திருத்துறைப்பூண்டி: கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வருவாய்த்துறையினருடன் இணைந்து வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை அலுவலா்களும் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் கிராமவாரியாக கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசின் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலா் சுகன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயல் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை, தென்னை, மா, வாழை, சவுக்கு, நெல் பயிர்களை தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலாளா் ககன்தீப்சிங் பேடி நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில், புயலால் பயிர்கள் எல்லா இடங்களிலும் சேதமடைந்துள்ளதை பார்த்தேன்.
குறிப்பாக தென்னை, மாமரம், வாழைமரம், நெல் பயிர்கள், காய்கறிகள், சவுக்கு அனைத்தும் சேதமடைந்துள்ளதுடன் குறிப்பாக தென்னை மரங்கள், காய்கறிகள் திண்டுக்கல் பகுதியில் அதிகமாக சேதமடைந்துள்ளது.
தோட்டக்கலை பயிர்கள் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் கீழ் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நேரடியாக வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடன் கிராம நிர்வாக அலுவலா்கள் இணைந்து பாதிப்பு குறித்து கணக்கு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வே எடுக்க வரும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கணக்கெடுப்பை விரைந்து முடித்து அரசுக்கு அறிக்கை அளித்த பின்னா்தான் விரைவாக இழப்பீடு கிடைக்க செய்ய முடியும்.
2016- 17-ல் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் பயிர்க்காப்பீட்டுத் தொகையாக ரூ.3400 கோடி வழங்கப்பட்டதாகவும் 2017-18 ஆண்டு சம்பா பருவத்திற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும் என தெரிவித்தார்.