முகப்பு
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் வன்முறை சம்பவம்: சிபிஐ வழக்கு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக

Updated On : 9 அக்டோபர் 2018, 4:28 am IST
பகிர்:


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக 20 அமைப்புகளின் மீது 12 பிரிவுகளின்கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி அண்மையில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிபிஐ புதிதாக வழக்கு: இதையடுத்து, தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இயங்கிவரும் சிபிஐ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஸ்டெர்லைட் வன்முறை சம்பவம் தொடர்பாக புதிதாக 12 பிரிவுகளின்கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் புகார்தாரராக தூத்துக்குடி சிறப்பு வட்டாட்சியர் (தேர்தல்) பி.சேகர் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் சட்டவிரோதமாக கூடுதல், வன்முறையில் ஈடுபடுதல், அரசு சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொலை முயற்சியில் ஈடுபடுதல், பெட்ரோல் குண்டு வீசுதல், கொடுமையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், வீடுகளை சேதப்படுத்துதல், இயற்கைக்கு மாறான மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 12 பிரிவுகளின்கீழ் 20 அமைப்புகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதல் தகவல் அறிக்கையில், அரசு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலையம், தென்பாகம் காவல் நிலையம், பாத்திமாநகர், மாதா கோயில், ஸ்டெர்லைட் ஆலைப் பகுதி ஆகிய இடங்களில் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த உத்தரவை மீறி நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் சட்டவிரோதமாகக் கூடி, அரசு சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் விசாரணை: இந்த வழக்கில் சில அமைப்புகளின் பெயரை முதல் தகவல் அறிக்கையிலேயே சிபிஐ சேர்த்துள்ள நிலையில், பல அமைப்புகளின் பெயரை இன்னும் சேர்க்காமல் எண்ணிக்கையில் மட்டும் வைத்துள்ளது. வழக்கின் விசாரணை தொடங்கியதும், வன்முறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்ட அந்த அமைப்புகள் வழக்கில் சேர்க்கப்படும் என சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்த வழக்குத் தொடர்பாக தமிழக போலீஸார், ஏற்கெனவே விசாரணை செய்த நபர்களிடமும், வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் முதல்கட்டமாக விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், தூத்துக்குடியில் முகாமிட்டு ஓரிரு நாள்களில் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.