சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் இதயமான பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பின் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன் காலை 10 மணிக்கு திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரம் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை.
2019-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறும் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் இதயமான பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பின் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது:
2019 நாடாளுமன்றத் தேர்தலையும், ஒருவேளை அத்துடன் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறுவதாக இருந்தால் அத்தனையும் எப்படி எதிர்கொள்வது என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதன் பொருட்டு தற்போது திமுகவுடன் தோழமையில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதேசமயம் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து கட்சியின் இதயமான பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.
தேர்தல் அறிக்கையானது உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.