சென்னை: வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் சிறந்த கவிதை, கட்டுரை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கும் தமிழ் இலக்கிய விருதுகளுக்குப் படைப்பாளர்கள் வரும் நவம்பர் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அந்த அமைப்பு திங்களன்று (அக்டோபர் 21) வெளியிட்டுள்ள செய்தி:
வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின் "முப்பெரும் விழா" மேடையில், இவ்வருடத்திற்கான 'தமிழ் இலக்கிய விருதுகள்' வழங்கப்படவுள்ளன.
கடந்த வருடம் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக எழுத்தாளர் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த சிறார் இலக்கியம் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் ஆகிய இரண்டு புதிய பிரிவுகள் இணைக்கப்படவுள்ளன.
இந்த ஏழு பிரிவுகளிலும் விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சேர்த்து ரூபாய் 5000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
படைப்புகளை அனுப்புவதற்கான விதிமுறைகள்:
கடந்த 2017 நவம்பர் மாதத்திலிருந்து 2018 அக்டோபர் மாத காலகட்டத்துக்குள் வெளிவந்தவையாக இருக்க வேண்டும். படைப்புகள் அனைத்தும் முதல் பதிப்பாக இருப்பது அவசியம்; மறுபதிப்பு, மறுபிரசுரம்/தொகுப்பு நூல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது; மேற்கூறிய நிபந்தனைகளின் கீழ்வரும் படைப்புகளில் ஒரே ஒரு பிரதியை மட்டும் படைப்பாளிகள் மற்றும் பதிப்பகத்தார் வாசகசாலைக்கு அனுப்பினால் போதுமானது. அனுப்ப வேண்டிய கடைசித் தேதி 07.11..2018; வாசகர்களும் மேற்கூறிய விதிகளின்படி தகுதியான படைப்புகளின் ஒரு பிரதியை அனுப்பலாம். மேலும் வாட்சப் / மின்னஞ்சல் வழியே சரியான நூல்களைப் பரிந்துரையும் செய்யலாம். தங்களைப் பற்றி மற்றும் நூல் குறித்த முழுமையான குறிப்பு அவசியம்.
மேலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு.. தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடைப்பேசி எண்கள்: 9942633833 / 9790443979.
புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
வெ. கார்த்திகேயன், 80, சுவாமிநாதன் இல்லம்(3வது வீடு, தரைத்தளம்), முதல் பிரதான சாலை, ஶ்ரீ சத்யசாய் நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை - 600 073
மின்னஞ்சல்: vasagasalai@gmail.com