எந்திரன் கதை விவகாரம்: இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்
எந்திரன்' திரைப்படத்தின் கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்திரன்' திரைப்படத்தின் கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த எந்திரன் படத்தின் கதை என்னுடையது. கடந்த 1996 -ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் ஜூகிபா' என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். அந்த கதையை எனது அனுமதியை பெறாமல் இயக்குநர் ஷங்கர் எந்திரன் படமாக எடுத்துள்ளார். எனவே இதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் லோகேஷ் என்பவர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு காரணமாக வெளியூரில் உள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கே.இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தொகையினை விலங்குகள் நல அமைப்பிடம் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 12 -ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.