சென்னை: பிரதமரைத் தேர்வு செய்யும் தகுதி தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் கிடையாது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் வியாழனன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட அதிக இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்கும்.
சமூக வலை தளங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக நக்சலைட்டுகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பா.ஜ.க.வின் ஆலோசனையைக் கேட்க மாட்டார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூட்டம் ஒன்றில் பேசும்போது கூறியது பற்றி கேட்டதற்கு, 'பிரதமரைத் தேர்வு செய்யும் தகுதி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் கிடையாது' என்று அவர் கூறினார்.
'சாமானியனின் குரல் சர்க்காருக்கு தெரியவில்லை' என அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் வெளியாகி இருந்த செய்தி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'தூணுக்கு பின்னால் நின்று பேசுவதற்கு எல்லாம் பதிலளிக்க முடியாது' என்று அவர் தெரிவித்தார்.