தமிழக அரசின் சமூக நலத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் சமுதாய வளைகாப்பு திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை 71,280 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சர் வி. சரோஜா தெரிவித்தார்.
சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, சென்னை சர்.பிட்டி தியாகராய அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், அமைச்சர் வி.சரோஜா பேசும்போது, "சமுதாய வளைகாப்பின் முக்கிய நோக்கமே கர்ப்பிணிகள், சிசு இறப்பு விகிதத்தை குறைத்தலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமேயாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை 71,280 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர். இதற்காக ரூ.1.78 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது' என்றார்.
இதைத்தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்களவை உறுப்பினர்கள் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், எம்எல்ஏக்கள் ஆர்.நடராஜ், ப.சத்தியநாராயணன், சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.