தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவராக டி.கே.ராமச்சந்திரன் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை பணி நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு அண்மையில் வழங்கியது. இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவராக டி.கே.ராமச்சந்திரன் விரைவில் நியமிக்கப்படுகிறார்.
அவர் துறைமுகத் தலைவராக பொறுப்பேற்கும் காலத்தில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் நீடிப்பார்.
கர்நாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர்: 1991-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார், டி.கே.ராமச்சந்திரன். கர்நாடக இசை வாய்ப்பாட்டு கலைஞராக விளங்கி வரும் அவர், ஒவ்வொரு மார்கழி மாத இசைக் கச்சேரியிலும் பாடி வருகிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த அவர், அண்மையில் இந்து சமய அறநிலைய துறை ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனம் செய்யப்பட்டு ஓரிரு வாரங்களிலேயே அவர் தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறநிலைய துறை: சிலை திருட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளில் இந்து சமய அறநிலைய துறையின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலைய துறை ஆணையாளராக இருந்த ஜெயா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, டி.கே.ராமச்சந்திரன் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அவரும் இப்போது மாற்றப்பட்டதால், அறநிலைய துறை ஆணையாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவது ஒருபுறமிருக்க, இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளரும் அடிக்கடி மாற்றப்பட்டு அல்லது மாறி வருவதால் துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.