உடல் இயக்கக் குறைபாடுகளுக்கான சிறப்பு நவீன சிகிச்சை மையம் அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. பார்கின்சன் எனப்படும் நரம்பு சார்ந்த நோய்க்கான மருத்துவ மையமாக அது செயல்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே உடல் இயக்க குறைபாட்டுக்கான சிகிச்சை மையம் தனியே அமையப்பெறுவது அப்பல்லோவில் மட்டும்தான் என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு ஆலோசகர், பேராசிரியர் டாக்டர் பரேஷ் கே. தோஷி சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் பேரில் 400 பேர் என்ற அளவில் உள்ளது. இந்த விகிதமானது 2030 ஆம் ஆண்டில் மேலும் உயரக் கூடும். நரம்புசார்ந்த இந்த நோயானது 60 வயதைத் தாண்டிய முதியோர்களுக்கு அதிகம் ஏற்படக் கூடியது. இதன் காரணமாக உடல் இயக்கத்தில் தளர்வு, குரல் நடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
பார்க்கின்சன்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. இருந்தபோதிலும், அதற்கான நவீன சிகிச்சைகள் மக்களை இன்னமும் முழுமையாகச் சென்றடையவில்லை என்றார் அவர்.