வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது தந்தையும், திமுக பொருளாளருமான துரைமுருகன் மர்றும் அவரது உறவினர்கள் வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
துரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. உறவினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.11.48 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை காலை 10:30 மணியளவில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தலை ரத்து செய்ய வேண்டாமெனில் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்டவரை தான் தகுதி நீக்க வகை செய்கிறது, வேட்பாளரை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.