பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம் பேரருவியில் குறைந்த அளவில் விழும் தண்ணீரில் குளிக்கவும் ஏராளமானோர் குவிந்தனர்.
கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் விடுமுறையை உற்சாகமாக கழிக்க நீர்நிலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அகஸ்தியர் அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினர். அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள கயல்மீன் காட்சியகத்தை கண்டு களித்தனர். அங்குள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காரையாறு, முண்டன்துறைக்குச் செல்ல வனத் துறை தடை விதித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
குற்றாலத்தில்: குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழையின் காரணமாக பேரருவியில் தண்ணீர் விழத் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், பண்டிகை காலம் என்பதாலும் அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. இந்நிலையில், நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பேரருவியில் தண்ணீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதையடுத்து, ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.