சென்னை: தெற்காசிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை குறிவைக்கும் மதத்தீவிரவாதத்தால் உந்தப்படுகின்ற பயங்கரவாதம் செயல்படுகிறது என்று இலங்கை குண்டுவெடிப்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நேற்று (21.04.2019) நிகழ்ந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகளில் 290 பேர் இறந்துள்ளனர், 500 பேர் காயமுற்றுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொடிய சம்பவத்திற்கு எதிராக தனது வலுவான கண்டனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் தற்கொலைபடையினரை பயன்படுத்தியும், பயங்கரமான வெடிகுண்டுகளை பயன்படுத்தியும் ஈஸ்டர் ஞாயிறு மாதா கோவில்களில் கூடுகின்ற மக்களை குறிவைத்து தாக்கியும், அதேபோன்று ஹோட்டல்களிலும் நிகழ்ந்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை இலக்காக வைத்து மதத்தீவிரவாதத்தால் உந்தப்படுகின்ற பயங்கரவாதம் செயல்படுகிறது என்பதை இத்தாக்குதல் வெளிச்சம்போட்டு காட்டுகின்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கை மக்களோடு தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த படுகொலைக்கு காரணமான அமைப்பையும், குற்றவாளிகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நம்புகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.