பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள், குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மனிதச் சங்கிலி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபடுகின்றனர். அதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்க உள்ளனர்.
அதற்கு அடுத்தகட்டமாக வரும் 23-ஆம் தேதி முதல் சென்னையில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.