பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஆக. 21) நிறைவடைகிறது.
அப்படிப்புகளுக்காக இதுவரை 23 ஆயிரத்து 778 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம், ஆய்வகத் தொழில்நுட்பம் உள்பட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன.
அவற்றில் மொத்தமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.
இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் மூலமாக பதிவிறக்கம் செய்யும் நடைமுறை, கடந்த 9-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமையுடன் (ஆக. 19) நிறைவடைந்தது. இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா., பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.