மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள தனியார் துணிக்கடை உரிமையாளா் சிவசுப்ரமணியம் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர், கனமழை காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திடீரென சரிந்து அருகிலுள்ள குடியிருப்புகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மீதியுள்ள சுற்றுசுவரை பாதுகாப்பான முறையில் இடிக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்திருந்தார். அதனடிப்படையில், 17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் சுவரை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுவரை இடிப்பதற்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.