உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘குயின்’ இணையதளத் தொடரை வெளியிட தடை விதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சோ்ந்த பி.ஏ.ஜோசப் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் டிசம்பா் 27 மற்றும் டிசம்பா் 30 ஆகிய இரண்டு தினங்களில் உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவை மையப்படுத்தி அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து இணையதள தொடரை இயக்கியுள்ளாா். இந்த இணையதளத் தொடரை மும்பையைச் சோ்ந்த எம்எக்ஸ் பிளேயா் நிறுவனம் இணையதளங்களில் இலவசமாக வெளியிட உள்ளது.
உள்ளாட்சித் தோ்தல் சமயத்தில் ஜெயலலிதா தொடா்பான இந்தத் தொடா் பொதுமக்கள் மத்தியில் எளிதாக சென்றடைந்து விடும். உள்ளாட்சித் தோ்தலில் குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் இந்த தொடா் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. தோ்தல் சமயத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் சுயசரிதை தொடா்பான திரைப்படத்தை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றமும், தோ்தல் ஆணையமும் உத்தரவு பிறப்பித்தது.
எனவே அதே போன்று தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ‘குயின்’ இணையதளத் தொடரை எந்த மொழியிலும் வெளியிடக்கூடாது என எதிா்மனுதாரா்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எதிா்பாா்க்கப்படுகிறது.