நத்தம்: பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் வாஜ்பாய் என்று தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதால் சலசலப்பு உண்டானது.
திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடந்தது. அந்த கூட்டத்தில் மாநில வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசும் போது, 'தற்போது வாஜ்பாய் அறிவித்துள்ள பட்ஜெட் அருமையாக உள்ளது. விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்குகிறது. இந்த பட்ஜெட்டை முதல்வர் பழனிச்சாமி வரவேற்றுள்ளார்' என்று பேசினார்.
தற்போது பொறுப்பு நிதி அமைச்சராக உள்ள பியூஷ் கோயல்தான் பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால் அவருக்குப் பதிலாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்று சீனிவாசன் பேசியுள்ளார்.
அவர் இவ்வாறு பேசுவது என்பது ஒன்றும் புதிதல்ல. வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசுகையில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லிக்கு போய் பிரதமர் நரசிம்மராவுடன் பேசுவார் என்று பேசியது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதே போல பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன் சிங் என்றும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்.ஜி.ஆர். என்றும் பேசி கேட்பவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.