மதுரை: ஏன் சாலைகளை சரியாகப் பராமரிக்காத சுங்கச் சாவடி நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கக் கூடாது? என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர், மாநிலம் முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் நிலவும் முறைகேடுகள் மற்றும் அவற்றைச் சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியிருந்தார்.
அந்த மனுவானது வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் கூறியதாவது:
நாடு முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் சுங்கச் சாவடிகள் தங்கள் பொறுப்பில் இருக்கும் சாலைகளை முறையாகப் பராமரிப்பதே இல்லை.
அதேசமயம் சுங்கச் சாவடிகளில் வசூல் செய்வதற்கு என்று ரவுடிகளை நியமித்து வசூலிக்கும் அவலமும் தொடர்கிறது.
ஆனால் இவையனைத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது கண்டு கொள்வதே இல்லை. அது உறங்கிக் கொண்டே இருக்கிறது.
ஏன் சாலைகளை சரியாகப் பராமரிக்காத சுங்கச் சாவடி நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்க கூடாது?
ஏன் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடாது?
இவ்வாறு உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.