புது தில்லி: தமிழகத்தில் 40 தொகுதிகளும் நமதே என்ற முழக்கத்தோடு மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என்று மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி உட்பட தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்வதாக பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், தமிழகத்தில் 40 தொகுதிகளும் நமதே என்ற முழக்கத்தோடு மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என்று கூறினார்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும். இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்.
மத்தியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையிலும் தேர்தலை சந்திப்போம். தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை இனிமையாக அமைந்தது என்று கூறினார்.
அதிமுக - பாஜகவுடனான தேர்தல் உடன்பாடு உறுதியான நிலையில், பாஜக - தேமுதிக இடையேயான தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் பியூஷ் கோயல்.