நாட்டின் வளர்ச்சியில் அசராத நம்பிக்கை உள்ள கட்சிகளுடன் மட்டும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் என்று, அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் அவரை தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் சந்தித்து மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் பாஜகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாமல் நல்லாட்சியை விரும்பும், பிரதமராக மோடியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்.
மேலும், நாட்டின் வளர்ச்சியில் அசராத நம்பிக்கை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்ற தகவல் கொஞ்சம், கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைக் கூட்டணி கட்சிகள்கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
முன்னதாக, கமலாலயத்தில் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.