தமிழகத்தில் பிற கட்சிகளை வளர்க்க அதிமுக பாடுபடாது என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கொடநாடு விவகாரம் என்பது புனையப்பட்ட நிகழ்வு ஆகும். மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி முதல்வர் மீது அவதூறு பரப்புவதற்காக எதிர்க்கட்சிகள் நாடகமாடி வருகின்றன.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும். அதை சீர்குலைக்கும் நோக்கில் திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன. ஆனால், திமுக, காங்கிரஸ் கூட்டணியால் மக்களவை மட்டுமின்றி சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.
காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை. அதே நேரத்தில் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்குமோ அக்கட்சியுடன் இணைந்து மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக முயற்சித்து வருகிறது.
தமிழகத்தில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது. அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று சிலர் கூறுவது கேலியாக உள்ளது. அதிமுகவை நாங்கள் வளர்க்கிறோம். பாஜகவை அக்கட்சியினர் வளர்த்துக் கொள்ளட்டும். பிறக் கட்சிகளை வளர்க்க அதிமுக எப்போதும் பாடுபடாது.
கடந்த 2009, 2011, 2014, 2016 ஆகிய மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பதை அவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். மத்திய அரசோடு, மாநில அரசுக்கு உள்ள உறவு என்பது வேறு, பாஜக- அதிமுக உறவு என்பது வேறு என்றார்.