சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தின் முன் திங்களன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை எம்.பி. செவ்வாயன்று ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதேபோல ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் துணை முதல்வர் ஓபிஎஸ் வரும் 29ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் புதன்கிழமை (23.01.2019) ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ஓபிஎஸ் கோரி இருந்தார்.
இதுதொடர்பாக அவரது தரப்பில் இருந்து விளக்க கடிதம் ஒன்று ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனை அடுத்து வருகிற 29ந்தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் நேரடி விசாரணை தேவை இல்லை என்று, ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையத்தின் வழக்கறிஞர் கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.