சென்னை: முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் நாட்டுப்பற்றை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்னார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு தொடர்பாக மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன்வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:
முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இன்று (29/01/2019) காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலான முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடந்து, அதில் இந்திய அரசு வெற்றி பெற்றது.
அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல்கலாம் அவர்களின் துணையுடன், பொக்ரானில் அணுகுண்டு சோதனையையும் நிகழ்த்திக் காட்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் பெர்னாண்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி கொள்கை ரீதியாக எவ்வளவு மாறுபாடு கொண்டிருந்தாலும் அவரின் நாட்டுப்பற்றை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவை தாங்கும் வலிமையை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தி வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.