தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 80 முதல் 90 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும் என்றனர்.
70 மி.மீ.மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் மாத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் குடிமியான்மலையில் 70 மி.மீ. மழையும், கடலூர் மாவட்டம் வேப்பூரில் 60 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் 50 மி.மீ., புதுக்கோட்டை, கீரனூர், காரைக்குடி, செங்கல்பட்டு, அரியலூரில் தலா 40 மி.மீ. மழையும் புதன்கிழமை பதிவானது.
8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 105, மதுரையில் 104, திருச்சி, கரூர் பரமத்தி, வேலூரில் தலா 102, சென்னை, தூத்துக்குடி, பாளையங்கோட்டையில் தலா 100 டிகிரியும் வெயில் புதன்கிழமை பதிவானது.