மருத்துவமனைகளில் அல்லாமல் வீடுகளிலேயே இறப்போரின் மறைவுக்கான சான்றிதழ்கள் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டுமென அதிமுக எம்.எல்.ஏ., பரமசிவம் கோரிக்கை விடுத்தார்.
சட்டப் பேரவையில் சனிக்கிழமை பேசிய அவர், மருத்துவமனையில் இறந்தால் அதற்குரிய காரணத்தைத் தெரிவித்து படிவம் 4ஏ சான்று அளிக்கப்படும். இதன் அடிப்படையில் இறப்புச் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. ஆனால், வீடுகளில் இறப்போருக்கும் அத்தகைய படிவம் 4ஏ-வை கிராம நிர்வாக அலுவலர்கள் கோருகிறார்கள்.
மருத்துவமனைகளில் மட்டுமே அளிக்கப்படும் அத்தகைய சான்றை வீடுகளிலேயே இறப்போருக்கு அளிக்க முடிவதில்லை. எனவே, வீடுகளில் இறந்தால் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு இறப்புச் சான்றிதழை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.