திருமலையில் கல்யாண கட்டம் பகுதியில் கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்தார்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பாபு தன் மனைவி இந்துமதி மற்றும் 8 வயது மகன் லோகநாதனுடன் திங்கள்கிழமை மதியம் திருமலைக்கு வந்தார். இரவு கல்யாண கட்டம் பகுதியில் அவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது லோகநாதன் கழிப்பறைக்கு சென்றார். அங்கிருந்து திரும்பும்போது வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் சிறுவன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கார் ஓட்டுநர் திருமலை அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற விவரங்கள் விசாரணைக்குப் பின் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.