குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை தலைமை அலுவலகக் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
சென்னை நந்தனத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை தலைமை அலுவலகக் கட்டடத்தையும், தியாகராயநகர் உணவுப் பொருள் மண்டல அலுவலகக் கட்டடத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகத்துக்கான கூடுதல் கட்டடத்தையும், அரியலூரில் மண்டல அலுவலகக் கட்டடத்தையும் முதல்வர் திறந்தார்.
திருவண்ணாமலை எலத்தூர், தச்சம்பாடி, தஞ்சாவூர் ஒரத்தநாடு, புதுக்கோட்டை துளையனூர், கொன்னையூர், தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி, போசிநாயக்கன் அள்ளி கிராமம், சிவகங்கை ஏனாதி கிராமம், விருதுநகர் சோழபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காமராஜ், அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.