கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சக கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே பெரும் உலுக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இருக்கும் அறையில் 3 பேரையும் அடைக்கக் கோரி சக கைதிகள் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து, தாக்குதல் சம்பவத்தை தவிர்க்க, சிறைக்காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சக கைதிகளிடம் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் 3 கைதிகளும் வேறு சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்று அளிக்கப்பட்ட உத்தரவை அடுத்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.