தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஆவணங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கடந்த முறை இருந்த நாசர் தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2019- 2022 -ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாக குழுவைத் தேர்வு செய்யும் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார். அதன்படி, சங்கத்தின் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்க அவரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
விதிமுறைகள் அமல்: இந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக சங்கத்தின் ஆவணங்கள் அனைத்தையும் நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் வியாழக்கிழமை ஒப்படைத்தார். அந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விரைவில் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளன.