ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக அளித்துள்ள புகாரில், "தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு வெளியே சோதனைகள் மேற்கொள்ளவில்லை. அதனால், அதிமுகவினர் தூத்துக்குடியில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இதன்மூலம், தூத்துக்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உடனடியாக சோதனை நடத்தினால் பணப்பட்டுவாடாவை தடுக்கலாம்.
தேர்தல் அமைதியான முறையிலும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்காளர்களுக்கு எந்தவொரு இடத்தில் இருந்தும் பணம் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.