தலித், சிறுபான்மையின மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.
பாஜகவின் வெற்றிச் செய்திகள் மட்டுமே நாடெங்கும் அலை பாய்ந்து கொண்டு இருக்கும்வேளையில், வேறு சில செய்திகள் கவலை அளிக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி நகரில் வெள்ளிக்கிழமை இரண்டு பேர் பசு மாட்டுக் கறி எடுத்துச் சென்றார்கள் என்று கூறி, "பசு காவலர்கள்' அவர்களை மரத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தின் பதூரா வட்டத்தில் உள்ள மாகூவத் கிராமத்தில் உள்ள கோயிலில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் நடத்துவதற்கு உயர் சாதியினர் தடை விதித்து இருப்பதாக, பிரவீன் என்ற தலித் சமூகத்தை சேர்ந்தவர் தனது முகநூலில் பதிவு செய்து இருக்கிறார். இந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று கூறி, 200-க்கும் மேற்பட்டவர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து, கணவன்-மனைவி இருவரையும் தாக்கியிருக்கின்றனர்.
எனவே, சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனைப் பாதுகாத்து, மத நல்லிணக்கத்தை உருவாக்கி, நாடு முழுமையும் அமைதி நிலவும் வகையில் ஆட்சிச் சக்கரத்தை நீங்கள் சுழற்ற வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.