சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்றைய தினம் திருத்தணியில் 45.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியுள்ளது.
நேற்றைய தினம் அக்னி நட்சத்திரம் தனது கொடூர முகத்தை தமிழர்களுக்கு காட்டிய நாளாக அமைந்துவிட்டது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், தமிழகத்தின் திருத்தணி பகுதியில் நேற்று 45.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் கொளுத்தியது. இது தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான அதிகபட்ச வெப்பமாகும். இதே போலவே இன்றைய தினமும் மிகக் கொடூர வெப்பம் பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் திருத்தணி, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், மேற்கு கடலூர் மாவட்டங்கள், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் அக்னி வெயில் கொளுத்தும் அபாயம் உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி தமிழகத்தில் இதே திருத்தணி பகுதியில் தான் கோடை வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவானது. அப்போது 45.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவானது. எனவே, இன்றைய தினம் இந்த அளவு தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலாவது பதிவாகும் வாய்ப்பும் உள்ளது.
தமிழகத்தில் நேற்று கோடை வெப்பம் பதிவான அளவானது..
திருத்தணி - 45.1 டிகிரி செல்சியஸ்
திருவண்ணாமலை - 44.4 டிகிரி செல்சியஸ்
வேலூர் - 43.6 டிகிரி செல்சியஸ்
பூவிருந்தமல்லி - 43.2 டிகிரி செல்சியஸ்
காஞ்சிபுரம் - 43 டிகிரி செல்சியஸ்
இதே போல தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக வெப்பம் வாட்டி வதைப்பது தொடரும். ஜூன் மாதம் முதல் வாரம் வரையிலும் கூட காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கோடை வெப்பம் அதிகமாகவே காணப்படும்.
பெங்களூருவில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும். கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.