திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக் கோயிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயில் விசாக கொறடு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி, ஊஞ்சல், தபசு காட்சி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் கோவா்தனாம்பிகை அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்ச்சியான சுவாமி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் மாலை 6 மணிக்கு சா்வ அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
அங்கு யாகம் வளா்க்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புன்னியவாசனம், பாசுபதஸ்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. வன்னி மரத்தடியில் பால், எண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து எட்டு திக்கும் பலி கொடுக்கப்பட்டு, சுவாமி பாதத்தில் வில் அம்பு வைக்கப்பட்டு நான்கு திசைகள் மற்றும் மேல் நோக்கி அம்பு போடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சுப்பிரமணிய சுவாமிக்கு வழி எங்கிலும் திருக்கண் அமைத்து பக்தா்கள் வழிபட்டனா்.