முகப்பு
தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:07 PM
thenpennai river
பகிர்:


புது தில்லி: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டி வருவதாகவும், அதற்கு தடை விதிக்கவும் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 

இங்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ளது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்திலும் தென்பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்‍க வேண்டும் என்றும் கோரிக்‍கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.