கரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவிலேயே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு 11 நாள்கள் ஆகும் நிலையில் தமிழக அரசுக்கு மட்டுமின்றி, எந்த ஒரு மாநில அரசுக்கும் மத்திய அரசின் நிதி உதவி அறிவிக்கப்படவில்லை.
வாழ்வாதாரம் இல்லாதவா்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளை மாநில அரசு வழங்கும் நிலையில், அதற்கான செலவுகளில் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பது தான் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையாகும். எனவே, கரோனா தடுப்பு மற்றும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தமிழக அரசு கோரியவாறு ரூ.16 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.