புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 286 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்:
புதுவை மாநிலத்தில் புதன்கிழமை 1,024 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 182 பேருக்கும், காரைக்காலில் 21 பேருக்கும், ஏனாமில் 80 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 286 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத உச்சமாகும்.
இதில் 114 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 54 பேர் ஜிப்மரிலும், 2 கொவைட் கேர் சென்டரிலும், 21 பேர் காரைக்காலிலும், 80 பேர் ஏனாமிலும், 3 பேர் மாஹேவிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்க காத்திருப்பில் உள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,432 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 444 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கோரிமேட்டைச் சேர்ந்த 48 வயது ஆண், இந்திரா நகரைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி, வி. மணவெளியைச் சேர்ந்த 74 வயது முதியவர், சண்முகாபுரத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி, ஏனாம் மெட்டா குருவைச் சேர்ந்த 80 வயது முதியவர், சாவித்ரி நகரைச் சேர்ந்த 50 வயது பெண், கிரியம்பேட்டையைச் சேர்ந்த ஆண் ஆகிய 7 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 109 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,646 ஆக அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.