முகப்பு
தமிழ்நாடு

வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம்: உயர்நீதிமன்றம்

வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை தனி நபர்கள் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

கரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும்,  ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கணபதி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவை தளர்த்த வாய்ப்பு உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு தரப்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்த இயலாது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம். சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் என உத்தரவிட்டு, விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டதை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

மேலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை என்று கூறியதுடன், தமிழக அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.