இஐஏ குறித்து கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சந்தூரை சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட மற்றொரு வழக்கு, நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கையும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்த இரண்டு வழக்குகளும் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.