அரியலூர்: தா.பழூர் ஒன்றிய முகாம்களில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மழையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்துகொண்டு, சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூர், சாத்தம்பாடி, முட்டுவாஞ்சேரி கிராமங்களைச் சேர்ந்த அந்தந்த பகுதிகளில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அரிசி, வேட்டிசேலை, பாய், போர்வை மற்றும் உணவு ஆகிய பொருள்களை வழங்கினார்.
அப்போது, மழையினால் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 215 நபர்களுக்கு தலா ரூ.4,100 வீதம் ரூ.8 லட்சத்து 81,500 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கோவிந்தபுத்தூர் கிராம மக்களின் கோரிக்கையின்படி அங்குள்ள தரைப்பாலத்தினை புதிய மேம்பாலமாக கட்டித்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தா.பழூர் ஒன்றியக் குழுத்தலைவர் மகாலெட்சுமி, கோட்டாட்சியர் பூங்கோதை, வட்டாட்சியர் கலைவாணன் உட்பட பலரும் உடனிருந்தனர்.