திருவான்மியூர்: கடல் அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி
திருவான்மியூரில் கடல் அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலியானார்.
சென்னை: திருவான்மியூரில் கடல் அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலியானார்.
சென்னை பெசன்ட் நகர், வண்ணாந்துரையைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் ரேவதி, தினந்தோறும் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்து அலை சறுக்கு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
வழக்கம்போல இன்று காலை தந்தையுடன் திருவான்மியூரில் உள்ள கடற்கரையில், ரேவதி அலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென ராட்சத அலை அவரை இழுத்துக் சென்றது.
ராட்சத அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற கடலில் குதித்தார் பாலாஜி. மகளை பத்திரமாக மீட்டு கரையேற்றிய நிலைல், மிகப்பெரிய கடல் அலையில் அவர் சிக்கிக் கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக கடலில் குதித்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், பாலாஜியின் உடல், சற்றுத் தொலைவில் கரை ஒதுங்கியது.
இது குறித்து திருவான்மியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மென்பொருள் நிறுவன ஊழியரான பாலாஜியின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடற்கரைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதித்திருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.