மழை பாதிப்பு: நாகை, திருவாரூரில் முதல்வர் இன்று ஆய்வு
புரெவி புயல் எதிரொலியாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார்.
புரெவி புயல் எதிரொலியாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார்.
புரெவி புயல் காரணமாக, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால், நாகை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த வெள்ள பாதிப்புகளை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
முன்னதாக, நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த முதல்வர், இரவு வேளாங்கண்ணியில் தங்கினார்.
புதன்கிழமை காலை தனது ஆய்வைத் தொடங்கும் முதல்வர் கனமழையால் சேதமடைந்த நாகூர் ஆண்டவர் தர்கா சுற்றுச்சுவரை காலை 7 மணி அளவில் பார்வையிடுகிறார். பின்னர், கருங்கண்ணி பகுதியில் விளைநிலங்களில் ஏற்பட்டு சேதங்களைப் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிகிறார்.
தொடர்ந்து, பழங்கள்ளிமேடு , அருந்தவம்புலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
புதன்கிழமை பிற்பகல் மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள நல்லாடை, மொழையூர் ஆகிய பகுதிகளில் பயிர் சேதங்களையும், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள வெள்ள நிவாரண முகாமையும் முதல்வர் பார்வையிடுகிறார்.