ஓமலூர் அருகே சாலை விபத்தில் சிறுவன் உள்பட இருவர் பலி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாலை விபத்தில் சிறுவன் உள்பட இருவர் பலியாகினர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் தீவட்டி பட்டியில் நடைபெற இருந்த சாலைப் பணிகளுக்கு வேலைக்கு செல்வதற்காக ஒரு டெம்போவில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த வாகனம் சேலம் விமான நிலையம் அருகே குப்பூர் பிரிவு சாலை அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக நிறுத்த முயற்சித்தபோது நிலை தடுமாறியது.
சாலையின் வலது பக்கம் வேகமாக பாய்ந்து சென்று தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டெம்போ வாகனத்தில் வந்த எடப்பாடியைச் சேர்ந்த மெய்வேல்(60), மணிகண்டன் (4) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்டோர் ஓமலூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஓமலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.