மக்களின் தேவையை நிறைவேற்றுவதே எனது முதல் பணி: முதல்வர் பழனிசாமி
மக்களின் தேவையை நிறைவேற்றுவதே எனது முதல் பணி என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
தமிழ்நாடுமக்களின் தேவையை நிறைவேற்றுவதே எனது முதல் பணி: முதல்வர் பழனிசாமி
மக்களின் தேவையை நிறைவேற்றுவதே எனது முதல் பணி என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
அரியலூர்: மக்களின் தேவையை நிறைவேற்றுவதே எனது முதல் பணி என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
அரியலூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக கரோனா தொற்று பரவல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், அரியலூர் மாவட்டத்தில் தொழில், பணி காரணமாக வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் தங்கியிருந்தோர் சொந்த ஊருக்கு திரும்பிய போது கரோனா தொற்று பரவல் அதிகமானது. இதனை மருத்துவக்குழுவினர் ஆராய்ந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளம், தில்லி போன்ற மாநிலங்களில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளன ஆனால் தமிழகத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். ஆனால், தற்போது அந்த மாநிலங்களில் தான் அதிகம் தொற்று பரவி உள்ளது.
தேசிய அளவில் பல்வேறு துறைகளில் விருது பெறுவதில் தமிழகம் முதலிடம்: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும், தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென தெரிவித்து, தமிழகத்தை பாரத பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தமிழக அரசு தேசிய அளவில் பல்வேறு துறைகளில் விருது பெறுவதில் முதலிடத்தை பிடித்துள்ளது.
நடப்பாண்டு 32.40 லட்சம் மெட்ரிக் கடன் நெல் கொள்முதல்: பயிர்காப்பீடு திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு அதிகப்படியான தொகையை பெற்று தந்துள்ளது. குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதின் விளையாக, ஏரி, குளங்களில் மழைநீர் சேமிக்கப்பட்டு, தற்போது அதிகப்படியான நெல்விளைச்சல் ஏற்பட்டுள்ளது.டெல்டா பகுதிகளில் நடப்பாண்டு 32 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானம் கிடைத்துள்ளது.
நீட் தேர்வுக்கு முன்பு நுழைவுத் தேர்வு இருந்த போது 40 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடங்கள் கிடைத்தன. இதைத் கருத்திக் கொண்டு தான் கிராமப் புற மாணவர்கள் பயன் அடையவேண்டும் என்பதற்காகவே மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு 3 பேர் மருத்துவம் படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு இதன் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
அரியலூர் மாவட்ட எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை ஏற்று அரியலூரில் மருத்துவக்கல்லூரியும், ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர்.
ஐஐடியில், அரசு வழங்கிய அறிவுரையை பின்பற்றாத காரணத்தால் தான் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கமல் அரசியல் செய்ய தகுதியற்றவர்: அரசுத்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு குறித்து கமல் தெரிவித்துள்ள கருத்துக்கு, பிக்பாஸ் நடத்தி பல குடும்பங்களை சீரழித்து வரும் கமல் அரசியல் செய்ய தகுதியற்றவர்.
ராஜேந்திரன் சோழனுக்கு மணிமண்டபம்: கங்கைகொண்ட சோழப்புரத்தில் ராஜேந்திர சோழனுக்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைப்பது, சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகளுக்கு தனிச் சாலை, கொள்ளிடத்தில் தடுப்பணை குறித்து பரிசீலனை செய்யப்படும்.
நிலக்கரி சுரங்கத்துக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு: ஜயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றார்.
பேட்டியின் போது அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஜயங்கொண்டம் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.