மருத்துவம்: நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று கலந்தாய்வு
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (டிச.19) தொடங்குகிறது.
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (டிச.19) தொடங்குகிறது. அதில் பங்கேற்க, தரவரிசைப்படி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கியது.பொதுப்பிரிவு முடிந்த பின்னா் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், ஐஆா்டி பெருந்துறை, வேலூா் சிஎம்சி கல்லூரி இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (டிச.19) தொடங்குகிறது. வரும் 23-ஆம் தேதி வரை அக்கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.
நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14,276 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனா். தமிழகத்தில் 15 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 952 எம்பிபிஎஸ் இடங்கள் (என்ஆா்ஐ-க்கு 306 இடங்கள் உட்பட) மற்றும் 18 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.