மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மஞ்சள் நோய் தாக்கி வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் கருகி வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மானாமதுரை ஒன்றியம் தெற்குசந்தனூர் கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்து விவசாயிகள் வாழை நடவு செய்துள்ளனர்.
தற்போது இந்த மரங்களில் காயுடன் குலை தள்ளிய நிலையில் சமீபத்தில் இப் பகுதியில் பெய்த மழையால் மஞ்சள் நோய் தாக்கி மரங்களில் உள்ள வாழை இலைகள் கருகி மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நல்ல விளைச்சல் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 4 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு முன்பு வாழை பயிரிட்டோம். தற்போது தான் வாழை மரங்களில் காய் காய்க்கத் தொடங்கியுள்ளது.
தொடர் மழையால் வாழை இலைகளில் மஞ்சள் நோய் தாக்கி இலைகள் கருகி வருகின்றன. இதன் காரணமாக வாழைக்காய் மற்றும் வாழை இலைகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் கிராமத்தில் மட்டுமே இதுபோன்று வாழை மரங்களை நோய் தாக்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெற்குசந்தனூர் பகுதி வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.