முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு சீர்காழியில் பெண்கள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ பாரதி வழங்கினார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு எம்.எல்.ஏ. பாரதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலாவதாக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்களது பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதனை அடுத்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு போர்வை, பிஸ்கட் மற்றும் பழங்களை வழங்கிய எம்.எல்.ஏ. குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து, அன்பாலயத்திற்கு சென்று அங்கு உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடைகளை வழங்கி, குழந்தைகளுக்கு அதிமுக சார்பில் தயாரிக்கப்பட்டிருந்த உணவுகளைப் பரிமாறினார்.
அதன்பின்னர், அரசுப் போக்குவரத்து பணிமனையில் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம், பேரவைச் செயலாளர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.