தமிழ்நாடு

நகர, கிராமப் பகுதிகளில் புத்துயிர் பெறும் மார்கழி பஜனை: சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம்

ஆம்பூர் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மார்கழி பஜனை புத்துயிர் பெற்றுள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் மார்கழி பஜனையில் பங்கேற்கின்றனர்.

எம். அருண்குமார்

ஆம்பூர் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மார்கழி பஜனை புத்துயிர் பெற்றுள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் மார்கழி பஜனையில் பங்கேற்கின்றனர்.
 மார்கழி மாதத்தில் இறைவனை நினைத்து பக்திப் பாடல்களை பாடியபடி தெருக்கள் வழியாக சென்று இறுதியாக கோயிலில் பாடல்களைப் பாடி மார்கழி பஜனையை நிறைவு செய்வது தொன்று தொட்டு நடைபெறுவது வழக்கம்.
 அந்தக் காலத்தில் அதற்காக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பக்திப் பாடல்களை அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கற்றுத் தருவார்கள். எனினும் கால மாற்றத்தில் மார்கழி பஜனையில் சிறுவர்கள், இளைஞர்கள் பங்கேற்பது குறைந்து கொண்டே வந்தது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் பாரம்பரிய வழக்கங்களைக் கைவிடத் தொடங்கினர். அவர்களுடைய ஆர்வம் சமூக வலை தளங்களை நோக்கிச் சென்றது.
 ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இறைவனிடத்திலும், மார்கழி பஜனையிலும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆர்வம் ஏற்படத் தொடங்கியுள்ளது. ஆம்பூர் நகரில் தேவார சபையினர், முரளிதர சுவாமிஜியின் ஜிஓடி அமைப்பைப் பின்பற்றுபவர்கள், ஏ-கஸ்பா, சான்றோர்குப்பம், கிருஷ்ணாபுரம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பஜனைக் குழுவினர் என பல்வேறு பஜனை குழுவினர் மார்கழி மாதத்தில் தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை உள்பட பல்வேறு பாடல்களை பாடிக் கொண்டு பல்வேறு தெருக்கள் வழியாக சென்று இறுதியில் முக்கிய கோயில்களில் பஜனையை நிறைவு செய்கின்றனர்.
 அதே போல ஆம்பூரை அடுத்த கரும்பூர், மிட்டாளம், ராமாபுரம் மற்றும் பந்தேரப்பல்லி பகுதிகளில் பண்டரி பஜனைக் குழுவினர் மார்கழி பஜனை பாடி வருகின்றனர். பாடலுக்கு ஏற்ப சிறுவர், சிறுமிகள் பங்கேற்கும் நடனமும் நடைபெற்று வருகிறது. சிறுவர், சிறுமியருக்கு பஜனைப் பாடல் மற்றும் நடனத்தை கிராமங்களில் கற்றுத் தருகின்றனர். 20 முதல் 30 பேர் வரை சிறுவர்கள் குழுவாக இணைந்து நடனம் ஆடி, பாடல்களைப் பாடுகின்றனர்.
 தற்போது கோயில் கும்பாபிஷேக விழாக்கள், திருவிழா, ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாசார பண்பாட்டுத் திருவிழா என பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விழாக்களில் பஜனை, பஜனைக்கு ஏற்ப நடனம் ஆகியவை முக்கிய நிகழ்வாக இடம்பெறுகிறது.
 விருப்பப்படுவோரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மார்கழி மாதத்தில் அவர்களின் வீடுகளுக்கே பஜனைக் குழுவினர் சென்று பக்திப் பாடல்களை பாடி முடிக்கின்றனர். அதன் பிறகு தெருக்கள் வழியாகச் சென்று கோயிலில் பஜனைகளை நிறைவு செய்வது வாடிக்கையாகி வருகிறது. மார்கழி மாத பஜனையில் சிறுவர்களும் இளைஞர்களும் அவர்களாகவே தன்னார்வத்துடன் பங்கேற்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT