திருச்சி: திருச்சியில் இன்று வியாழக்கிழமை(ஜன.23) காலை பழிக்குப்பழியாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த ஜிம் மணி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், புகழேந்தி என்பவர்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.
அப்போது செந்தில், புகழேந்தி ஆகிய இருவரும் ஜிம் மணியை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜிம் மணி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக செந்தில், புகழேந்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கொலையான புகழேந்தி கடந்த 13 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்து உறையூர் காவல்நிலையத்தில் ஒன்பது நாட்களாக கையெழுத்திட்டு வந்துள்ளார். இன்று கையெழுத்திட சென்று கொண்டிருந்தபோது சின்னச்செட்டி தெருவில் மர்ம நபர்கள் சிலர் புகழேந்தியை(28) சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர். இதில் புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழிக்குப்பழி வாங்க நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உறையூர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.