பத்திர எழுத்தர்கள் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் ஓமலூர் சார் பதிவாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்திற்கு அரக்கோணத்திலிருந்து வந்த வழக்குரைஞர் மூலமாக 13 காவல்துறையினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொது மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள பத்திர எழுத்தர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து சென்றதால் ஓமலூர் சார் பதிவாளர் அலுவலகம் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று மூடப்பட்டது.
இதைத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியும், தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை சுகாதாரத் துறையினர் செய்து அவர்களைத் தனிமைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.